|
வயதாகிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. வயதான காலத்தில், அதை சந்தோஷமாக வரவேற்றால், வாழ்நாள் முழுக்க அது நீடிக்கும். "ஆண்டவா! வயதாகி விட்டதே, என்னால், அதை செய்ய முடியவில்லையே, இதைச் செய்ய முடியவில்லையே' என்று வேதனையில் உழன்றால், தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடும். உடலில் தளர்ச்சி அதிகரிக்கும். அதனால் பாதிப்புகளும் அதிகமாகும்.
அறிகுறி என்ன? வயதுக்கேற்ற வேலைகளைதான் செய்ய வேண்டும். அறுபதை எட்டும் போதே, சில வேலைகளை நாம் தவிர்ப்பது நல்லது. எலும்புகள் வலுவிழந்து காணப்படும் நிலையில், தசைகள் சுருங்கிப் போயிருக்கும் நிலையில், பெரிய அளவில் வேலையை செய்ய முடியாது.
மனதை இலகுவாக்கிக் கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூட்டுகள் வலுவாக இருக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், தினமும் உடற்பயிற்சி தேவை.
எப்படி இருக்க வேண்டும்? நொறுக்குத் தீனிப்பக்கமே போகக் கூடாது. மன அழுத்தம் வர அனுமதிக்கக் கூடாது. தினமும் உடற்பயிற்சி தேவை. தோலைப் பாதிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அதிக ஓய்வு எடுக்க வேண்டும். அதிக குடிநீர் குடிக்க வேண்டும். உப்பு கொழுப்பு "நோ!'
வயதாகி விட்டால், இரண்டைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒன்று-உப்பு. இன்னொன்று-கொழுப்பு. இவை இரண்டும் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வயதான நிலையில், கொலஸ்ட்ரோல் அதிகமாக உடலில் சேரும் என்பதால், அது சார்ந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கால்சியம் தேவை
வயதான பெண்களுக்கு, அதிலும், மாதவிடாய் நின்று போன நிலையில் உள்ளவர்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. அதற்கு, டாக்டரை ஆலோசித்து, அவர் சொல்வதற்கேற்ப, கால்சியம் மாத்திரைகள், உணவு வகைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மூட்டுவலி வருவது, முதுகுவலி வருவதெல்லாம் தவிர்க்கலாம். அதுபோல, வயதான பெண்களுக்கு கலோரிச் சத்து தேவை. சராசரியாக ஒருவருக்கு 1,500 கலோரிச் சத்து தேவை. வயதானவர்கள் அதற்கு அதிகமாகவே பெற வேண்டும். ஆண்களை விட, பெண்களுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்று விட்ட நிலையில், அவர்களுக்கு கால்சியம் சத்து குறைந்து விடும். அப்போது, அவர்களின் எலும்புகளுக்கு வலு தேவைப்படுகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு பாதிப்பு நான்கு மடங்கு அதிகம். அதனால், விட்டமின் "டி' சத்து, கால்சியம் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சியும் தேவை.
அல்சீமரா? மறதி நோய், வயதானவர்களுக்கு கண்டிப்பாக வரும். அதனால், மறதி வந்தாலே, "அடடா, "அல்சீமர்' நோய் வந்து விட்டதே என்று கவலைப்படக் கூடாது. "அல்சீமர்' நோய்க்கு சில அறிகுறிகள் உள்ளன. வயதானாலே, சில சம்பவங்கள் மறந்து போகும், அதை வைத்து தவறான முடிவுக்கு வரக்கூடாது. சமீபத்திய சம்பவங்கள், உறவினர்கள் பெயர்கள் போன்றவற்றை மறந்து விட்டது தொடர்ந்தாலோ, மறதி அதிகமாக இருப்பதாக உணர்ந்தாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும். "அல்சீமர்' நோயைத் தவிர்க்க, நவீன முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முழுமையாக அமுலானால், பலருக்கு பயனளிக்கும்.
கண் பார்வை மங்குமா? வயதானால், கண்பார்வை மங்கிவிடும் என்று பலரும் நினைப்பது சரியல்ல. சிலருக்கு 90 வயதானாலும் கூட, பார்வை பளீச் என்று இருக்கும். பத்திரிகையை கண்ணாடி போடாமலேயே படிப்பர். மாடிப்படி ஏறும் போது தடுக்குவது, பஸ் நம்பர் தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை வைத்து, மங்கலான பார்வையை போக்கிக்கொள்ள டாக்டரிடம் போய், பரிசோதித்துக் கொண்டு, கண்ணாடி அணியலாம்.
கட்ராக்ட் வருமா? வயதானவர்களில் பலருக்கும் பொதுவாக வரும் பாதிப்பு, "கட்ராக்ட்!' கண்லென்சில் புகை படிமம்தான் இது. இதை சரி செய்ய இப்போது ஏகப்பட்ட நவீன வசதிகள் வந்துவிட்டன. "காட்ராக்ட்' பாதிப்பு கடுமையாக இருந்தால், அறுவை சிகிச்சை உள்ளது. இன்னொரு கண் பாதிப்பு, "க்ளூகோமா!' வயதானவர்களுக்கு சகஜமாக வரும். கண்ணில் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் வருகிறது. டாக்டரிடம் காட்டி சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பார்வை பறி போக வாய்ப்புண்டு. காது கேட்காது போனால், வயதானால் வரும் ஒரு பிரச்சினை தான் இதுவும். பேசும் போது வார்த்தை தடுமாறும். பாடல் வரிகளை கேட்க முடியாமல் போகும். வாசலில் யாராவது அழைப்பு மணி அடித்தால் கூட, பதில் சொல்ல மாட்டார்கள். சாதாரண காது கேளாத பிரச்சினை என்றால், சில மருந்துகள் சரி செய்துவிடும். சீரியசான பிரச்சினை என்றால் டாக்டரை ஆலோசித்து சரி செய்வதே நல்லது. Last update : 02-01-2008 16:01
|
|
|