|
சென்னை : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. ஃபியால் புயல் வீசியபோது அவர்கள் கடலில் இருந்துள்ளனர். இதனால் அவர்களின் நிலை அவர்களது கிராமங்களில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் வெளிமாநிலங்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி ராமையன்துறை, தூத்துர், இரவிபுத்தன்துறை, வல்லவிளை, மார்த்தாண்டன்துரை, நீரோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம் மகராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கோவா, கேரளா உள்ளிட்ட அரபிக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் பலர் இன்னும் கரை திரும்பவில்லை.
குமரியில் இருந்து வெளிமாநில கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற 100 படகுகள் திரும்பி வரவேண்டி உள்ளது. படகுக்கு 10 பேர் வீதம் 1000 பேர் இருந்தனர். அரபி கடலில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட புயல் மற்றும் கடல் சீற்றத்தில் மீனவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதவாறு உள்ளனர். மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.
வள்ளவிளை பகுதியில் இருநது கொச்சிக்கு மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களும், கொச்சி பகுதியில் கரை திரும்பினர். இதே போல் சின்னதுறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 பேர் கர்நாடக மாநில பகுதியில் கரை ஓதுங்கியுள்ளனர்.
தூத்துர் பகுதியை சேர்ந்த 10 பேர் கொல்லம் அழிக்கால் என்னும் இடத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அரபி கடலில் ஏற்பட்ட புயல் மழையால் வி்சைப்படகு உடைந்துள்ளது. அதில் இருந்த சஜன், ஆல்பரி, சிக்சன் ஆகிய 3 பேர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறுகையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 100 விசைப்படகுகளில் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மாதக்கணக்கில் தங்கி மீன் பிடிக்கின்றவர்கள்.
சமீபத்தில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக இந்த விசைப்படகுகளை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. அதனால் எங்கிருக்கிறார்கள் என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடியவில்லை.
மும்பை, கொச்சி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கப்பற்படை தளங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மற்றும் அதிவிரைவு படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
53 பேர் மீட்பு...
நாஞ்சில் மீனவர் தொழிலாளர் யூனியன் செயலாளர் ஜான் அலாய்சியஸ் கூறுகையில், 6 படகுகளில் இருந்த 61 மீனவர்களில் 53 பேர் கர்நாடக மாநிலம் கார்வார், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மற்றும் கோவாவில் மீட்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளன.
புயலின்போது சுனாமி அலைகளை விட மிகப் பெரிய அளவில் அலைகள் வீசியதால் மற்ற மீனவர்கள் அதில் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நவம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதிக்குள்ளாக, தலா 10 முதல் 12 மீனவர்களுடன் 250 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவற்றில் தற்போது 150 படகுகள் மாயமாகியுள்ளன. அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு வாரத்திற்குள் மீனவர்கள் கரை திரும்பி விடுவர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து மீட்க கடலோரக் காவல் படையின் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.
வழக்கமான நிகழ்வுதான் - தமிழக அரசு..
இந்த நிலையில், மீனவர்கள் காணாமல் போனது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள தங்குதளங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு மேற்கொள்ளவேண்டி, கடலுக்குச் செல்வது வழக்கமான நிகழ்வு ஆகும்.
அதே போல் 1-11-2009 தேதி முதல் வெவ்வேறு நாட்களில் 150 விசைப்படகுகள் (செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடிப்பு மேற்கொள்ளும் படகுகள்) கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி மற்றும் ஆழிக்கால் தங்கு தளங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இப்படகுகள் வடக்கு கேரளா முதல் குஜராத் வரையுள்ள கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 10-11-2009 அன்று நண்பகல் முதல் வீசிய "ஃபியான்'' என்ற கடும் புயலால் பாதிக்கப்பட்டனர்.
இப்புயலினால் பாதிப்பு அடைந்த படகுகள் மற்றும் மீனவர்களை மீட்க உடனடியாக கடலோர காவல்படை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
13-ம் தேதி கன்னியாகுமரி ஆழ் கடல் மீன்பிடிப்பு சங்கம் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தூத்துக்குடி மண்டல மீன் துறை இணை இயக்குனரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 7 படகுகள் கடலில் மூழ்கியதாகவும் 8 மீனவர்கள் காணாமல் போனதாகவும் அறியப்பட்டுள்ளது.
மூழ்கிய 7 படகுகளில் ஒரு படகில் சென்ற காயமுற்ற நிலையில் இருந்த 3 மீனவர்கள் கோவா கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் பெறப்பட்டது.
கோவா மற்றும் கர்நாடக மாநில மீன் துறை உயர் அதிகாரிகளுடன் மீன்துறை ஆணையர் தொடர்பு கொண்டு படகு உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து அம்மீனவர்களுக்கு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளித்திட மேற்கொண்ட முயற்சியினால் 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த 7 படகுகளை தவிர, இதர 3 படகுகள் மீட்கப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டு கொச்சின் மற்றும் கார்வார் கடற்கரை பகுதியில் உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகுகளை தேடி கண்டுபிடித்திட தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதனால் எவரும் பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் பெரும் சோகம்...
மீனவர்கள் கரைக்குத் திரும்பாததால், அவர்களது கிராமங்களில் பெரும் சோகமும், பரபரப்பும் நிலவுகிறது. குடும்பத்தினர் வீடுகளில் அழுதுபுலம்பியபடி உள்ளனர். குமரி மாவட்ட மீனவ சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து நடந்த சம்பவங்கள் பற்றி எடுத்து கூறினார்கள். கரைக்குத் திரும்பாத மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
TNC Last update : 14-11-2009 08:28
|
|
|