|
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு என எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் (எதுவும் உருப்படியில்லாமல்!) , படத்தின் நாயகி தியாவை மட்டுமே நம்பி, தியாவை தோலுரித்து காட்டியிருக்கும் ஒரு கேவலமான குப்பை தான் "காதல் என்றால் என்ன".
தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவில் கொண்டு செல்ல பல புதிய மாற்றங்களை,பிரமாண்டங்களை, புதுமைகளை பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தும் வேளையில் இப்படிப்பட்ட அபத்தங்களும் ரிலீஸாகி தலைகுனிய வைக்கின்றன.

நடிப்பு : தியா,வீரா,சரண்ராஜ்
இயக்கம் : காளிமுத்து
இசை : கே.பாரதி
தயாரிப்பு : ராஜன்
கதை:தியா ஒரு பரதநாட்டிய மாணவி.சரண்ராஜ் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர்.சரண்ராஜ் தியாவை வெறித்தனமாக காதலிக்கிறார்.ஆனால் தியாவோ வீராவை காதலிக்கிறார். இன்ஸ்பெக்டருக்கு கோபம்! தியாவை வீட்டில் சிறைபிடிக்கிறார். ஹீரோ எப்படி விடுவிக்கிறார் என்பதுதான் கதை.
படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும்.இன்று சின்னத்திரையில் அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கும் டி.வி சீரியல்களில் கூட சில தொழில்நுட்ப விசயங்கள் நன்றாக இருக்கும்.ஆனால் இப்படத்தில் கேமராவின் பல கோணங்களிலிருந்து தியாவின் அங்கங்கள் தவிர வேறு எதுவும் இயக்குனருக்கோ,கேமராமேனுக்கோ தெரியவில்லை போலுள்ளது.
ஹீரோ என்ற பெயரில் வரும் வீரா அவ்வப்போது நடிப்பு என்ற பெயரில் நம்மை வதைக்கிறார்.அமெச்சூர்தனமான நடிப்பு.சத்தியமாக அவருக்கு ஒரு எதிர்காலமும் இல்லை. இவர் பெரிய மனது வைத்து இனி நடிக்காமல் இருந்தாலே தமிழ் சினிமாவிற்கு அவர் செய்யும் பெரும் தொண்டு.சரண்ராஜிற்கு கெட்ட காலம் இப்படம் மூலம் தொடங்கியுள்ளது போலிருக்கிறது. தியா அவருடைய வேலையை குறைவைக்காமல் "தாராளமாக" செய்து விட்டு போகிறார்.
எப்படியெல்லாம் ஒரு படம் எடுக்கக்கூடாது என பாடம் கற்றுக் கொள்ள வேண்டியவர்களுக்காக எடுக்கப்பட்ட படம். சாக்கடையை கிளறினால் நாற்றம் தான் மிஞ்சும் .எரிச்சலூட்டும் இப்படத்தைப் பற்றி இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை.
காதல் என்றால் என்ன : குப்பை
அதிகாலை ரேட்டிங் : இப்படத்திற்கு ரேட்டிங் எல்லாம் குடுக்கமுடியாதுப்பா.....
 Last update : 24-05-2008 12:28
|