|
முதல்-அமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- பன்றி காய்ச்சலுக்கு சென்னையிலும் சிறுவன் ஒருவன் இறந்துள்ளான். இந்திய அளவில் பிரதமர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அதுபோல் அமைக்கப்படுமா?
பதில்:- நாளைய தினம் இங்கேயும் மருத்துவ துறையினருடன் கலந்து பேசி தடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்ய உயர் மட்டக்கூட்டம் நடக்கிறது.
கேள்வி:- இந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?
பதில்:- ஆமாம்.
கேள்வி:- பன்றி காய்ச்சலில் சிறுவன் இறந்ததால் பள்ளிகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு உங்கள் ஆலோசனை என்ன?
பதில்:- எது எது சாத்தியக்கூறோ, அதெல்லாம் கூட்டத்தில் விரிவாக பேசி முடிவு செய்யப்படும்.
கேள்வி:- கிங் இன்ஸ்டிடியூட்டில் பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனைக்கான வசதி இல்லை என்று கூறப்படுகிறதே?
பதில்:- நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றியும் விரிவாக ஆலோசிப்போம்.
கேள்வி:- எம்.எல்.ஏ.க்களுக்கு நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டுக்கு சென்று உள்ளார்களே?
பதில்:- எம்.எல்.ஏ.க்கள் இனாமாக நிலம் கேட்கவில்லை. வீடு கட்டுவதற்கு இடம் கேட்கிறார்கள். இதைப் பற்றி சட்டசபையில் சொல்லும்போது பரிசீலிப்பதாக சொன்னோம். கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் இது பற்றி யோசனை செய்தோம். ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் காங்கிரஸ் நண்பர்கள் சிலர் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் தருவதாக உறுதி அளிக்கவும் இல்லை. தந்து விடவும் இல்லை. ஒருவேளை தந்தாலும் கூட அதற்குரிய நியாயமான விலையை பெற்று கொண்டுதான் தருவதாக இருக்கும். இனாமாக தருவதாக இல்லை.
கேள்வி:- கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களே?
பதில்:- கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் சிலர்தான் எதிர்த்து அறிக்கை வெளியிடுவதையும் கூட்டங்களில் பேசுவதையும் தங்களுடைய பணியாக கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கத்தின் வீடுகளையோ, நிலத்தையோ குறைந்த வாடகைக்கு பெற்றுக்கொண்டிருக்கிற கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யார்-யார் என்ற விவரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட நான் விரும்பவில்லை.
கேள்வி:- பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பில் முக்கியத்துவம் உண்டா? ஒகேனக்கல் பிரச்சினை பற்றி பேசினீர்களா?
பதில்:- ஒகேனக்கல் பிரச்சினையோ அல்லது வேறு பிரச்சினையோ பேரமாக வைத்து அங்கு திருவள்ளுவர் சிலையையும், இங்கு சர்வக்ஞர் சிலையையும் திறக்கவில்லை. இரு மாநிலங்கள் இடையே உருவாக வேண்டிய, நிலைக்க வேண்டிய ஒற்றுமையை- நட்புணர்வின் அடிப்படையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி சென்னை அயனாவரத்தில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்படுகிறது.
கேள்வி:- சிலை திறப்பின் மூலம் இருமாநில உறவும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளதா?
பதில்:- நம்பிக்கையை நோக்கிதான் முன்னேற வேண்டும்.
கேள்வி:- பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவரையும் அழைத்து இருந்தார்கள். இங்கும் அப்படி அழைப்பீர்களா?
பதில்:- கூப்பிடாமல் இருக்கமாட்டோம். கூப்பிட்டால் என்ன பதில் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியும். கட்சி தலைவர் கலந்து கொள்ள வேண்டிய பல நிகழ்வுகளில் கூப்பிட்டு இருக்கிறோம். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அனைத்து கட்சி கூட்டங்களுக்கு தலைமை செயலாளர்தான் கடிதம் எழுதுவார். தி.மு.க. ஆட்சியில் அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தும் போதெல்லாம் முதல்-அமைச்சரே கடிதம் எழுதி அழைத்து இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் வராதது மட்டுமல்ல கபட நாடகம் என்று ஒரு சொற்றொடரை வாடிக்கையாக வைத்துள்ளார். அதைத்தான் பதிலாக தருவார்.
கேள்வி:- ஒகேனக்கல் பிரச்சினையில் தற்போதைய நிலை என்ன?
பதில்:- ஏற்கனவே கர்நாடக முதல்-மந்திரி பேசியுள்ளார். அது பற்றிய கருத்தை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ளோம். எல்லாம் சுமூகமாக முடியும்.
கேள்வி:- தமிழக அமைச்சரவையில் மாற்றம் உண்டா?
பதில்:- இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
கேள்வி:- இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு பணி நடப்பது பற்றி வெவ்வேறு விதமான தகவல் வருகிறதே?
பதில்:- ஏதோ ஒரு சாமியார் தப்பா சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதை கேட்டு ஏமாறாதீர்கள்.
கேள்வி:- வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்பதை நிரூபிக்க டெல்லியில் நடந்த கூட்டத்தில் இங்குள்ள கட்சிகள் செல்லவில்லையே?
பதில்:- போய் பார்த்தால் அவர்களும் எங்கள் கருத்தைதான் சொல்வார்கள். எனவேதான் தயங்குகிறார்கள். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவதற்கும் இதே வாக்குப்பதிவு எந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் முற்றம் கோணலாக இல்லை.
கேள்வி:- இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு பணி திருப்தியாக இருக்கிறதா?
பதில்:- இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் வேகமாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அதில் ஏதேனும் சந்தேகம் வந்தால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நேற்றோடு நாலு முறை இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. 4-வது முறையாக ரூ.15 கோடி மதிப்பில் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசும் அனுப்பி உள்ளது.
கேள்வி:- திருச்சியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பில் ஒரு அமைச்சர் நிலம் பாதிக்கப்படும் என்பதால் ஏரியின் வழியாக அமைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதே?
பதில்:- அப்படி குற்றச்சாட்டு இருந்தால் ஆராயப்படும். இது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- சத்துணவு பணியாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்களே?
பதில்:- சத்துணவு பணியாளர்கள் பகுதி நேர ஊழியர்கள்தான். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பகுதி நேர ஊழியர்களாக வந்துவிட்டு அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சியிலும் பகுதி நேர ஊழியர்களாக ஊதியம் பெற்று விட்டு இப்போது நாங்கள் பகுதி நேர ஊழியர்களாக இருப்போம் முழு நேர ஊதியமும் வேண்டும் என்றால் எப்படி பொருந்தும். இருந்தாலும் சத்துணவு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இரண்டு, மூன்று முறை ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாரோ சிலர் தூண்டி விடுவதால் தேவையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நடுநிலை யோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதாவை திருமதி என்று குறிப்பிட்டீர்களே?
பதில்:- அவர் தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று சொல்வதில்லையா. அப்படி சொல்லும்வரை திருமதி என்று சொல்வேன்.
கேள்வி:- பால் கொள்முதல் விலையில் மாற்றம் உண்டா?
பதில்:- தேர்தல்.
கேள்வி:- துணை நகரம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவீர்களா?
பதில்:- முயற்சிக்கப்படும்.
கேள்வி:- பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வக்ஞர் சிலை திறப்பு விழா இடம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்:- இல்லை. அதே இடத்தில்தான் சிலை திறக்கப்படுகிறது. சிலை திறக்கும் இடத்தில் நிகழ்ச்சியை வைத்தால் இடம் போதாது என்பதால் பக்கத்தில் ஒரு விளையாட்டு மைதானத்தை பார்த்து வந்துள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
TNC Last update : 10-08-2009 23:07
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|
Add-தமிழ் விட்ஜெட்
By: Ram () on 11-08-2009 12:08