|
கேபியின் கைது எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அவரது கைது இலங்கைக்கு மிக முக்கியமானது. ஏனெனில் அவர் தான் பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக இருக்கிறார். இப்போது அவர் எங்களிடம் உள்ளார். அவரை நாங்கள் எங்களது பாதுகாப்பில் வைத்திருக்கிறோம். அவர் இப்போது இலங்கையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் உங்களுக்குக் கிடைத்த முதலாவது பெரிய வெற்றி என்று சொல்லலாம் அல்லவா? சரி, இதனைக் கொண்டு எவ்வாறு விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத மற்றும் பணப் பரிவர்த்தனைத் தொடர்புகளை முறியடிக்கப் போகிறீர்கள்?
என்னால் தனியே இதனைச் செய்ய முடியாது. சர்வதேசம் இதற்கு எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். இது அவர்களுடைய பொறுப்பெனவே நான் நினைக்கிறேன். எல்லா நாடுகளுடைய அரசாங்கங்களும் இணைந்து இதற்கு உதவ வேண்டும். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. அது முழு உலகுக்குமான பிரச்சினை. எல்லோரும் இணைந்து தான் அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
- கேபியின் கைது பற்றி
நான் நினைக்கிறேன். அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று நான் கதைக்கப் போவதில்லை. ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர் எங்களிடம் தற்போது உள்ளார் என்பது தான். அவரைக் கைது செய்ய எங்களுக்குப் பலர் உதவினார்கள். அவர்களுக்கு இவ்விடத்தில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.
- பயங்கரவாதத்தைக் கையாள்வது குறித்து
எங்கள் எல்லோருக்கும் உள்ள பொறுப்பு அது. இது ராஜபக்சவின் வழிமுறையா அல்லது புஷ்ஷின் வழிமுறையா என்பதல்ல பிரச்சினை. எங்களிடம் ஒரு வழிமுறை இருக்கிறது. அதனைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். நாங்கள் எல்லோரும் இணைந்து உலகிலிருந்தே பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். அது தான் நாங்கள் செய்ய வேண்டியது.
- பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது குறித்து
பயங்கரவாதத்திற்கான நிதி என்பது ஆயுதக்கடத்தலிலிருந்தும் போதைவஸ்து கடத்தலிலிருந்தும் தான் கிடைக்கிறது. எனவே அதனை நாங்கள் முறியடிக்க வேண்டும். எனவே ஆயுத வியாபாரிகளும் போதைவஸ்து வியாபரிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.
- புலிகளின் வலைப்பின்னல் குறித்து
தெற்காசியப் பிராந்தியத்தின் பல நாடுகளிடையே இவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள். அவர்கள் அங்கு தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சில மேற்கு நாடுகளிலும் அவர்கள் பலமாக இருக்கிறார்கள்.
- இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து
இது நிச்சயமாக உள்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தீர்வு தான். நாங்கள் வெளியிலிருந்து எதனையும் பிரதி பண்ண விரும்பவில்லை. முக்கியமாக மேற்கிலிருந்து, குறைந்த பட்சம் அயல்நாடுகளிடமிருந்து கூட எதனையும் நாம் பிரதி பண்ண விரும்பவில்லை. எல்லா வகையான தீர்வுகள் தொடர்பாகவும் அக்கறை செலுத்தலாம். தீர்வு நாட்டினுள்ளிலிருந்து தான் எழும். உண்மையான தீர்வு மக்களிடமிருந்து வரும். அது எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கும். எல்லா சமூகங்களாலும் அங்கீகரிக்கப்படக் கூடியதாக இருக்கும்.
- அபிவிருத்தி குறித்து
என்னுடைய பிரதானமான நோக்கு இப்போது இடம் பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவது தான். கடந்த 30 வருடங்களில் வடக்கு கிழக்கு எத்தகைய அபிவிருத்தியையும் காணவில்லை. நாங்கள் இப்போது அதனை ஆரம்பித்திருக்கிறோம். அடிப்படைக் கட்டுமானங்களுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். அதன்பின்னர் இம்மக்களை மீளக் குடியேற்ற வேண்டும். அதன் பின்னர் அபிவிருத்தி தானாகவே வரும். அபிவிருத்தி இல்லாமல் எதனையும் அடைந்துவிட முடியாது. அதற்கு முதலில் அப்பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதன்பின்னர் நீர், மின்சாரம், குடியிருப்பு, வீதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றைத் தான் நாம் இப்போது செய்ய ஆரம்பித்துள்ளோம்.
180 நாட்களுள் அவர்களை மீளக் குடியேற்றுவது தான் எங்களது திட்டமாக இருக்கிறது. அதற்குள் 60 வீதத்தினரையாவது நாம் மீளக் குடியேற்றி விட்டால் நாம் திருப்தியடையலாம்.
- அதிகாரப் பகிர்வு இந்தப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நினைக்கிறீர்களா?
எங்களுடைய அரசமைப்பிலேயே அதிகாரப்பகிர்வு இருக்கிறது. ஆனால் நாங்கள் எவ்வளவு கொடுக்கப் போகிறோம் என்பது தான் கேள்வியாக உள்ளது. அது ஒரு பிரச்சினை இல்லை. அது விரைவில் செய்யப்பட்டு விடும். மாநகர சபைகள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் போது அவர்களுக்கு மேலதிகமாக எதனைக் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். 80 வீதமான தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள். நான் சொல்கிறேன் சிறுபான்மையினர் என்று இங்கு எவருமில்லை.
- 13வது திருத்தச்சட்டம்
நாங்கள் அதனோடு புதிதாக ஒன்றை கொடுக்கவுள்ளோம். அதாவது புதிய சேம்பர் ஒன்றைக் கொண்டு வர உள்ளோம். இரண்டாவது சேம்பர் எனும் அதனூடாக மாகாணங்களில் சிறுபான்மையோருடன் அதிகாரங்களைப் பகிர உள்ளோம்
- அது எவ்வாறு அமைந்திருக்கும்?
அதனை நாம் இன்னமும் கலந்துரையாடவில்லை. அதற்கான பிரேரணைகள் உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து அவற்றை நாம் அவர்களுடன் கலந்தாராய்வோம்.
- சமஷ்டி பற்றி
இல்லை. இல்லை. சமஷ்டி என்ற பேச்சுக்கே இலங்கையில் இடம் இல்லை. அது இங்கிருந்து தூக்கி வீசப்பட்டு விட்டது. மக்களிடமிருந்து வரும் ஒரு தீர்வே நடைமுறைப்படுத்தப்படும். சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துரையாடி ஒரு தீர்வைக்காணுவர். யாராவது வந்து மேற்கில் இப்படி நடந்தது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னால் நாம் அதனை ஏற்கப் போவதில்லை.
- தமிழர்களுக்கான தீர்வு
ஜேஆரோ சந்திரிகாவோ ரணிலோ எவரும் பிரபாகரனுடன் பேசவே முயன்றார்கள். 13வது திருத்தச் சட்டத்தை பிரபாகரன் முதலில் ஏற்றிருந்தார். கையொப்பமுமிட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் அதனை நிராகரித்தார். நானும் கூட அவருடன் பேச முயன்றேன். ஏழு மாதங்களாக நாங்கள் முயற்சி செய்தோம். அவர் பேச்சுக்கான கதவை மூடிவிட்டார். இறுதியாக நான் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தேன்.
TNC
Last update : 10-08-2009 17:36
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|