|
பக்கம் 1 / 3 முன்னாள் துணை சபாநாயகர்மீது மதுரை கலெக்டர் சகாயம் ஐகோர்ட்டில் வழக்கு. நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த சகாயம் அவர்கள் பணியிடைப் பயிற்சிக்காக முசெளரிக்குச் சென்றிருந்தபோது பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இது ஒரு பொதுவான மாற்றம் என்று அவர் கருதிய நேரத்தில் வார இதழ் ஒன்றில் (நக்கீரன்) முன்னாள் துணை சபாநாயகர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், அவர் ஆட்சியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருந்ததுடன் மாவட்ட நிர்வாகத்தைச் சீர்குலைத்த கலெக்டரை நான்தான் முதல்வரிடம் சொல்லி மாற்றினேன்" என்றும் சொல்லியிருந்தார்.
நக்கீரன் அக்டோபர் 20, 2010 இதழில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.
"அரசாணையை அமல்படுத்த வேண்டியவர்கள் அதிகாரிகள். அதனை அமல்படுத்தச் சொல்வது அரசியல்வாதிகள். சமத்துவபுரத்தில் சிலருக்கு வீடுகள் ஒதுக்க வேண்டுமென்று நானும் மத்திய மந்திரி காந்தி செல்வனும் துணை முதல்வரிடம் சொன்ன போது, “அரசாணை விதிகள் படி தான் வீடுகள் ஒதுக்கப்படும்” என்று சொன்னார் துணை முதல்வர். அதனால் நாங்கள் மேற்கொண்டு வலியுறுத்தவில்லை. சமத்துவபுரம் எங்கு அமைகிறதோ அந்த ஒன்றியத்துக்குட்பட்ட மக்களுக்குதான் முன்னுரிமை தரவேண்டும் என்கிறது அரசாணை. ஆனால் இதை புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்தார் கலெக்டர். 14 பவர் புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தார் சகாயம். இந்த பவர் புரோக்கர்கள் மீது ரேப் கேஸ், வழிப்பறி கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு க்ரைம் ரெக்கார்டுகள் உள்ளன. இவர்களின் பிடியில்தான் கலெக்டர் அலுவலகமே இருந்தது.
கிரிமினல்களுடன் ஒரு கலெக்டருக்கு என்ன சகவாசம்?
இந்த பவர் புரோக்கர்கள் எத்தனை தாசில்தார்களை தூக்கியடிச்சார் சகாயம்?
புரோக்கர்களுக்கு ஆதரவாக சகாயம் செயல்பட்டதால்தான் அவருக்கு எதிராக தாசில்தார்கள், விஏஓக்கள் போராடினார்கள். இரவு தங்கள் நிகழ்வுக்காக ஒரு 50 பேர்களை அழைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்குவார். இதற்காக ஒரு வீட்டை புடிச்சு அதை புது வீடு மாதிரி மாத்து.. ஏஸி போடு.. என்னோட வந்தவங்க எல்லாத்துக்கும் சாப்பாடு ரெடி பண்ணுன்னு அந்த ஊர் கிராம நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு போடுவாரு சகாயம். அதை ஏற்பாடு செய்வார் கிராம நிர்வாக அதிகாரி. அதற்கு 50 ஆயிரம் செலவாகும். இந்த 50 ஆயிரத்தை அரசு கணக்கிலும் ஏத்த முடியாது. பிறகு எப்படி அதை சரி செய்வார் அந்த அதிகாரி? ஆக லஞ்சம்தான் அந்த அதிகாரி வாங்க வேண்டும். லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிற சகாயம்,
தனக்கு கீழுள்ள அதிகாரிக்கு லஞ்சம் வாங்குகிற சூழலை உருவாக்கலாமா?
இதையெல்லாம் உடனே முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் சொல்ல வேண்டியது என் கடமை. அதைச் செய்தேன். மற்றபடி இவர் மீது எனக்கு தனிப்பட்ட குரோதம் கிடையாது. தனக்கு ஐஏஎஸ் கிடைக்காத கோபத்தில் தலைமைச் செயலாளர் மீதே புகார் வாசித்தவர் தானே இவர்? ஐஏஎஸ் பதவி மீது தீராத காதல் இருந்தால் முறைப்படி படித்து ஐஏஎஸ் தேர்வில் செலக்டாகி வர வேண்டியது தானே. நிர்வாகத்துக்காக அரசு செய்யும் மாறுதலை ஏற்றுக் கொண்டு பணி செய்வதுதான் ஒரு கலெக்டருக்கு அழகு. ஆனோ இவரோ பயிற்சியில் இருந்து கொண்டே சில அமைப்புகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். இது தான் ஒரு கலெக்டருக்கு அடையாளமா?
--------
அடிப்படை ஆதாரமற்ற தன் மீது களங்கம் சுமத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அவர் வெளியிட்ட கருத்துக்கள் பொது மக்கள் மத்தியில் தனக்கு அவப்பெயரை உருவாக்கும் என்பதால் தனது துறை அமைச்சரும் முன்னால் முதல்வருமான கருணாநிதிக்கும் துணை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் முன்னால் துணைசபா நாயகரின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பல பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பியிருந்தார். முதல்வரோ துணை முதல்வரோ பெயரளவுக்குக்கூட விசாரிக்காததால் மனம் வருந்திய அதிகாரி சகாயம் துணை சபாநாயகர் மீது வழக்குத் தொடுக்க அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அரசின் அனுமதி கிடைத்ததும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீது மான நஷ்ட ஈடு கோரிய வழக்குத் தொடுத்திருந்தார். தனக்குச் சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக அதிகாரிகளை பந்தாடும் போக்க்குக்கு பெரும்பாலும் அதிகாரிகள் பெருமூச்சு ஒன்றை மட்டுமே விடமுடியும் என்ற நிலையை மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முதல் முறையாக தகர்க்க முனைந்துள்ளார். அவதூறாக பேட்டி அளித்தாக ரூ.25 லட்சம் கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மீது, மதுரை கலெக்டர் உ.சகாயம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் யு.சகாயம் தாக்கல் செய்த வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது :
புதிய முயற்சி
நான், 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானேன். 9.6.08 அன்று நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டேன். அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நான் புதுமையான முயற்சிகளை எடுத்துள்ளேன். அதோடு அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தேன். ரூ.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிய வந்ததால், மாவட்ட வளர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தேன்.
சொத்து விவரம்
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட தாசில்தார், வி.ஏ.ஓ. ஆகியோர் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இரவு நேரங்களில் மாணவர் விடுதியில் இல்லாத காப்பாளர்களை சஸ்பெண்டு செய்தேன். பணியாற்றும் கிராமங்களில்தான் வி.ஏ.ஓ.க்கள் வசிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினேன். நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது வெளிப்படையான நிர்வாகம் செய்தேன்.
14 புரோக்கர்கள்
இந்த நிலையில் 28.9.10 அன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். ஆனால் எனக்கு பணி ஒதுக்கவில்லை. பின்னர் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாரப்பத்திரிகை ஒன்றில் என்னைப் பற்றி அப்போதைய துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி அளித்த பேட்டி வெளியாகி இருந்தது. அதில் நான் 14 பவர் புரோக்கர்களை வைத்துக்கொண்டு மாவட்டத்தை நிர்வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரூ.25 லட்சம் நஷ்டஈடு
அந்த புரோக்கர்கள், கற்பழிப்பு, கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், அவர்களின் பிடியில் மாவட்டம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதனால் என்னை எதிர்த்து அரசு அதிகாரிகள் சிலர் போராட்டம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க என்னை அவதூறு செய்யும் நோக்கத்தில் அளிக்கப்பட்ட பேட்டியாகும். ஆதரமற்றதும், என்னை பொதுமக்கள் மத்தியில் தவறான தகவலை வெளியிட்டு பொல்லாங்கு நிறைந்த பொய் பரப்புரை செய்து எனது நற்பெயருக்கு களங்கம் விளைத்தமைக்காக நஷ்ட ஈடாக எனக்கு அவர் ரூ.25 லட்சம் ரூபாய் கொடுக்க உத்தரவிட வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அனுப்பிய புகார் மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகார் விபரமாவது :-
அனுப்புதல்
உ.சகாயம், இ.ஆ.ப.,
மேலாண் இயக்குனர்,
புதிய திருப்பூர் பகுதிமேம்பாட்டுக் கழகம்,
சென்னை - 600018
பெறுதல்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
பொருள் - நாமக்கல் மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் மாறுதல் - பொய் குற்றச்சாட்டு - அவதூறு - மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் - சம்மந்தமாக
தங்களது ஓராயிரம் பொறுப்புகளிடையே, ஓயாத பணிகளிடையே, எனது கோரிக்கைக்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதி தங்களது பணிச் சுமையை என் பங்குக்கு நானும் கூட்டுவதில் எனக்கு வருத்தம்தான். எனினும் பணிக்காலம்; முழுமையும் ஆற்றும் கடமையே ஆருயிரினும் மேலானது எனவும், பிறழாத நேர்மையே பெருமைமிகு பண்பாகக் கருதும் ஒரு எளிய மக்கள் ஊழியனாகிய எனக்கு தாங்கள்தான், நியாயம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுத வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
நான் தமிழக அரசு உத்தரவிட்டவாறு 9.6.2008 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தேன். நான் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய நிலையில் 20.09.2010 அன்று 2 மாத பயிற்சிக்காக லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமி, மசூரிக்கு அனுப்பப் பட்டேன். இதனிடையே தமிழக அரசு ஆணை எண் 3822, பொதுத்துறை, நாள் 28.09.2010-ன்படி மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து நான் மாற்றப்பட்டு எந்தப் பதவியும் எனக்கு அளிக்கப்படாமல் விடப்பட்டேன். பிறகு எனக்கு அரசாணை எண் :3960, பொதுத்துறை, நாள்:08-01-2010ன் படி புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டேன். 2 ஆண்டுகள் 3 மாதம் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றக் கூடிய வாய்ப்பைத் தமிழக அரசு அளித்தது. அந்த வாய்ப்பை அரசின் நலத் திட்டங்களை முனைப்போடும், உள்ளச்சுத்தியோடும் கடைக்கோடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தினேன். அதோடு ஒரு அப்பழுக்கற்ற -நேர்மையான நிர்வாகத்தை நடத்தி ஏழை எளிய கிராம மக்களுடைய நம்பிக்கையை அரசின் மீது உருவாக்கிடும் வண்ணம் செயல்பட்டேன். இந்த நிலையில் எனக்கு கிடைத்திருக்கக் கூடிய இந்த மாறுதலை நான் ஒரு அரசு அலுவலருக்கு ஏற்படக் கூடிய, ஒரு வழக்கமான நிகழ்வாகத்தான் கருதிக் கொண்டேன்.
பயிற்சிக்காக சென்ற நேரத்தில் எனது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் வசித்தனர். எனது குழந்தைகள் அங்கிருந்துதான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எனது திடீர் மாறுதல் நான் 2000 கி.மீக்கு அப்பாலே பயிற்சியில் இருக்கிறபொழுது செய்யப்பட்டதால் எனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சங்கடமான ஒரு சூழல். புதிய மாவட்ட ஆட்சியருக்கு இல்லத்தை விடமுடியாத ஒரு இக்கட்டான நிலை. நான் இல்லாத நிலையில் என் குழந்தைகளை கல்வி ஆண்டின் பாதியில் சென்னையில் புதிதாக பள்ளியில் சேர்க்க முடியாத ஒரு கடினமான காலம். இது எனக்கு மட்டுமல்லாமல் என் மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் மன வேதனையை அளித்தது. ஆனால் அரசுப் பணியை – அதிகாரத்தை எள் முனையளவும் சுயநலத்திற்கு பயன்படுத்தாது நிகரற்ற நேர்மையோடும் - அளப்பரிய அர்ப்பணிப்புணர்வோடும் ஒரு லட்சியப் பயணமாக மேற்கொள்ளுகின்ற எனக்கு அத்தகைய வேதனை லட்சியத்திற்காகக் கிடைத்திட்ட வழக்கமான ஒன்று என மனப்பக்குவத்தோடும் மகிழ்வோடும் ஏற்றுக் கொண்டேன். மற்றபடி இந்த மாறுதலை நான் இயல்பாகத்தான் எடுத்துக் கொண்டேன். அதைப் போல கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிகளின்படி கிராமத்தில் தங்கவில்லை என்கின்ற நிலையிலும், அவர்களில் சிலர் எளிய கிராம மக்களிடத்தில் லஞ்சம் பெற்று அவர்களை வாட்டி வதைக்கின்ற புகார்கள் வந்த நிலையிலும், அவர்கள் மீது நான் கடுமையான நடவடிக்கை எடுத்தேன். அதன் காரணமாக எனக்கு எதிராக இந்த மாறுதலுக்கு முன்பாக வரை அவர்கள் சங்கத்தின் மூலமாக தொடர் போராட்டம் நடத்தினார்கள். அதைப்போல அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் என்னைத் தரக்குறைவாகப் பேசினார்கள். மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து என்னை விரைவில் விரட்டுவோம் என்று சவால் விட்டனர். இந்நிலையில் இந்த மாறுதல் வந்திருக்கின்ற காரணத்தினால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆதரவாக இந்த மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது என்று என்னுடைய நடவடிக்கையை அறிந்த அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் சொன்னாலும் இந்த நடவடிக்கையை உண்மையில் ஒரு நிர்வாக ரீதியிலான மாறுதல் என்றேதான் நான் கருதிக் கொண்டேன். இதனைப் பெரிதுபடுத்த ஒன்றுமே இல்லை என உளமாற நினைத்தேன்.
ஆனால் இந்த மாறுதலுக்கு எதிராகப் போராடிய பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் அக்டோபர் 20-22 2010 நக்கீரன் வார இதழில் வந்த கட்டுரையில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் அளித்த பேட்டி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் இந்த மாறுதல் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களினுடைய தொடர் முயற்சியாலும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டப் பின்னணியிலும் செய்யப்பட்டிருக்கிறது என்று அவரின் கூற்றுப்படியே நான் முடிவு செய்யத் தள்ளப்பட்டிருக்கிறேன். அவர் நக்கீரன் கேட்ட கேள்விகளுக்கு வழக்கமான - சாதாரண நிர்வாக நடவடிக்கைதான் இந்த மாறுதல் என்று பதில் அளித்திருந்தால் இதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது. நான் கருத்து சொல்ல எதுவும் இல்லாமல் போய் இருக்கும். ஆனால் அவருடைய பேட்டியில் என் மீது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான அவதூறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளார். அதோடு தான்தான் என்னுடைய மாறுதலுக்கு காரணம் என்றும், என்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை அவரே தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், அந்த அடிப்படையிலேயே நான் மாறுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இவரது இந்த குற்றச்சாட்டுக்களை நான் வன்மையாக மறுப்பதோடு இவை பொய்யையும், புரட்டையும் தாங்கிய ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக இருந்தது என்று அன்புடன் கூற விழைகிறேன். அதோடு நான் 20 ஆண்டு காலம் கட்டிக்காத்த, வேள்வியைப் போல் மேற்கொண்ட எனது நேர்மை, தவத்திற்கு களங்கம் அளிக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது என்பதோடு இது பொதுமக்கள் மத்தியில் எனக்கு ஒரு அவப் பெயரை உருவாக்கக் கூடிய ஒன்று என உளமாற உணர்கிறேன். உண்மையில் இவர் இவ்வளவு அவதூறாக, கோபம் கொப்பளிக்கும் வகையில் கருத்து கூற அவசியம் எங்கே எழுந்தது? அதன் பின்னணி என்ன? என்று ஆய்ந்திட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர் தன்னுடைய பேட்டியில் என்னை பார்த்து 14 பவர் புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தார் என்றும், இந்த பவர் புரோக்கர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும் கூறுகிறார். இவர்களின் பிடியில்தான் கலெக்டர் அலுவலகமே இருந்தது என்றும் கிரிமனல்களுடன் ஒரு கலெக்டருக்கு என்ன சகவாசம் என்கிறார் இவர். இந்த கடுமையான குற்றச்சாட்டுக்களை நான் மறுப்பதோடு மட்டுமல்ல, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நயவஞ்சகமான - முற்றிலும் பொய்யான - திசை திருப்பக்கூடிய ஒன்று என்றும் இதற்கு என்னுடைய கடுமையான ஆட்சேபத்தையும் நான் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு யார் அந்த 14 பவர் புரோக்கர்கள் என்றும் அவர்களுடைய பெயர் என்ன, நான் எந்த வகையில் அவர்களுக்கு உதவியிருக்கிறேன் என இதுகாறும் இவர் விவரங்களை வெளியிடாதது வருத்தத்திற்கு உரியது என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கிரிமினல்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு என்ன சகவாசம் என்றும், மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தேன் என்றும் இவர் குறிப்பிடுகிறார். யார் அந்த கிரிமினல்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் எழுப்புகிற இவரது இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அதோடு வஞ்சகமாய் பிரச்சனையை திசை திருப்பக்கூடிய வார்த்தை வன்முறை எனவும், பொல்லாங்கு நிரம்பிய பொய் பரப்புரை எனவும் அன்புடன் தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் அரசினுடைய திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியது மட்டுமல்ல. ”All those Men have their price “, என்று ராபர்ட் வால்போல் என்ற ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர் ஆட்சியாளர்களைப் பார்த்து நேர்மையற்றவர்கள் என்ற பொருளில் குறிப்பிட்ட வார்த்தையை பொய்யாக்கும் வகையில் மாவட்டத்தில் நேர்மையான – தூய்மையான நிர்வாகத்தை நடத்த எத்தனித்தவன் நான். தமிழகத்தில் எந்த மாவட்ட நிர்வாகமும் எடுக்காத – எடுக்கத் தயங்குகிற இலஞ்ச இலாவண்யத்திதற்கு எதிரான - இடைத்தரகர்களுக்கு எதிரான ஒரு நேர்மையான நிர்வாக நிலையை எடுத்தவன்.
“தத்துவங்களே ஆட்சிக்கு அடித்தளம் வகிக்கிறது” என்கின்ற கிரேக்க நாட்டின் சீரிய சிந்தனையாளன் பிளேட்டோவின் கூற்றுக்கு ஒப்ப, ”வார்த்தைகளே வரலாற்றை உருவாக்குகின்றன,” என்ற உண்மையை உணர்ந்த நான் “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து“ என்ற சொற்றொடரை நிர்வாகத் தாரக மந்திரமாய், நேர்மைப் புரட்சிக்கு அடிப்படையாய் - அடையாளமாய் என்னுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, எல்லா அலுவலகங்களிலும் எழுதச் சொல்லி பின்பற்ற அறிவுறுத்தியவன் நான். அதனால் அலுவலர்கள் மத்தியில் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்திடவும் பொது மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதன்முறையாக உளமாற முயற்சித்த மாவட்ட ஆட்சித் தலைவர் நான். அதோடு ஏழை மக்கள் வெகுவாரியாக வாழும் நம் நாட்டில், மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு இலஞ்ச இலாவண்யத்தில் ஊறிப்போன, தொடர்ந்து மக்களை வதைத்திடும் அலுவலர்களை கிரிமினல்களாகக் கருதி குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110ன் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது என்று கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர், நாமக்கல்லிற்கு கடித எண் : ROC 40005 (Confidencial)/2009/A-2 dated :28-02-2010 மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற நடவடிக்கை எடுத்தால் 6 மாதத்தில், அலுவலர்களிடையே காணப்படும் இலஞ்ச இலாவண்யத்தை முற்றிலும் களைந்து விட முடியும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த கடித நகலை தங்களின் மேலானபார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:1)
அது மட்டுமல்ல 2 கோடிக்கு மேலாக முறைகேடு செய்து ஊழலில் திளைத்த வளர் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நீக்கம் செய்து கைது செய்து கிரிமினல் வழக்கு தொடர்ந்தவன் நான். தமிழகம் முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது, அதனை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு கடிதமும் எழுதியிருக்கிறேன். இதுகாறும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நான் அறியவில்லை. இது பற்றிய பத்திரிகை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.( இணைப்பு:2)
அதைப்போல அரசு பயன்பாட்டிற்கு அதிகமாக நிலம் கொடுத்த விவசாய மக்களுக்கு முன்னுரிமைச்சான்று வழங்காமல் சட்டத்திற்கு புறம்பாக வேலைவாய்ப்பு பெற தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமைச் சான்று வழங்கிய நிகழ்வில் 12 கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 16 பேர் மீது பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்தை சீர்படுத்தியவன் நான். மேலும் சட்டத்திற்கு புறம்பாகச் சான்று பெற்ற நூற்றுக் கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்திய வேலைவாய்ப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையருக்கு கடிதம் எழுதியவன் நான். இதில் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக நான் அறியவில்லை. இது பற்றிய பத்திரிகை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.( இணைப்பு:3)
அது மட்டுமல்ல ‘ஆற்று வளமில்லாமல் வேற்று வளமில்லை; நதியில்லாமல் நமக்கு நாதியில்லை’ என்பதை உணர்ந்து காவிரி நதியை நச்சு நதியாக்கும் திருச்செங்கோடு வட்டம், பள்ளிபாளையத்தில் இயங்கக் கூடிய சாயப்பட்டறைகளை நூற்றுக்கணக்கில் நான் இழுத்து மூடினேன். நாமக்கல்லில் சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயாரித்து பல காலம் நூற்றுக் கணக்கில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்த நபரை கைது செய்ய உத்தரவிட்டவன் நான். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.
கலப்படம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தேன். குறிப்பாக தேயிலை தூள் தயாரிப்பில் பெருமளவில் கலப்படம் செய்து விற்பனை செய்தவர்களை கைது செய்து கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தினேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:4)
எளிய மக்களின் உயிரோடு விளையாடக் கூடிய போலி மருத்துவர்களைக் கண்டறிந்து 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:5)
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் ஏழை தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருள் வழங்கலில் முறைகேடு செய்த 20க்கும் மேற்பட்ட விடுதிப் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தினேன்.
மலை வாழ்மக்களின் நலனைக்காக்க கொல்லிமலையில் சரியாக பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன். உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே இருக்க வேண்டுமென்று வியாபாரிகளை அப்புறப்படுத்தினேன்.
இது போன்ற சட்டத்தை அமல் படுத்துகின்ற பணி மட்டுமல்ல. பிற முன்னேற்ற, ஆக்கப்பூர்வமான பணிகளையும் நான் மேற்கொண்டேன். அரசு பள்ளிகளிலே எம் இணையற்ற தாய்மொழியாம் தமிழ் வழியிலே படிக்கக் கூடியவர்கள், ஏழை எளிய பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று - அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிய வேண்டுமென்பதற்காக பலமுறை உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். திட்டங்கள் தீட்டியிருக்கிறேன். அதை நடைமுறைப் படுத்துவதைக் கண்காணித்திருக்கிறேன்.
அதைப் போல ஆரம்பப் பள்ளிகளில் சரியான அடித்தளம் அமைத்திட வேண்டும் என்பதற்காகவும் - அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க வேண்டுமென்பதற்காகவும் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து ஊராட்சி ஒன்றியம் தோறும் கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினேன், வழிகாட்டினேன். நூற்றுக் கணக்கான பள்ளிகளை நானே தணிக்கை செய்தேன். அரசு பள்ளிகளில் படிக்கக் கூடிய சிறந்த ஏழை எளிய குழந்தைகளுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கியிருக்கிறேன். என் தாய்திருநாட்டின் ஏழைப் பிள்ளைகளின் கடைசி நம்பிக்கையாம் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த கூட்டங்களை 08-06-2010 , 22-07-2010, 26-07-2010, 02-09-2010-, 03-09-2010 ஆகிய தேதிகளில் நடத்தியிருக்கிறேன்.
ஒரு தூய்மையான, ஏழை கிராம மக்கள் மீது உளமார்ந்த பரிவு கொண்ட நிர்வாகத்தை நான் நடத்தினேன். எந்த பவர் புரோக்கர்களும் என்னிடத்தில் பணியாற்றிய வட்டாட்சியர்களை மிரட்ட முடியாது. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அப்படி யாருடைய பரிந்துரையின் படியும் நான் வட்டாட்சியர்களை பணிமாற்றம் செய்ததில்லை. என்னிடத்தில் பணியாற்றிய எல்லா வட்டாட்சியர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லாத வரை அவர்களது பதவி முழுக்காலமும் பணியாற்ற அனுமதித்து இருக்கிறேன். எந்த அலுவலர்களாவது அவர்களுடைய இலஞ்ச இலாவண்ய நடவடிக்கைகளால் பொதுமக்களால் மிரட்டப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக இயலாது. எனக்கு எதிராக அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்கிறார் இவர். அவர்கள் போராட்டம் நடத்தியது ஊழலுக்கு எதிரான என்னுடைய நடவடிக்கையை கண்டித்துத்தானே ஒழிய அவர்களை மாறுதல் செய்ததால் அல்ல என்று தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிராமத்தில் நான் இரவில் தங்கியதற்கு ரூ.50,000 செலவை கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்கிறார் இவர். கிராமத்தில் தங்குவதற்கு ஒரு வீட்டைப் பிடித்து புது மாதிரியாக வீட்டை மாற்றி ஏ.சி. போடு என்று நான் சொல்லியதாக இவர் கதை விடுகிறார். இது மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி. பி.துரைசாமி அவர்களின் கற்பனைத் திறனுக்கு - பொய்யைப் போனியாக்கி மக்களை நம்ப வைத்துவிடலாம் என்கின்ற இவரது அசாத்திய நம்பிக்கைக்கு ஒரு சான்று. உண்மையில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் 20 கிராமங்களிலேயே நான் தங்கியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் எங்கும் தனியாக வீடு எடுக்கச் சொன்னதில்லை. என்றைக்கும் நான் ஏ.சி. போடச் சொன்னதில்லை. நான் தங்கியிருந்தது எல்லாம் கிராமத்து பள்ளிக்கூடங்களிலும், சாவடிகளிலும்தான்.
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் வாழக்கூடிய வேலிக்காடு என்கின்ற கிராமத்தில் 17.1.2009 அன்று நான் இரவில் தங்கினேன். இந்த கிராமம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மின்சாரம் வராத ஒரு இருண்ட கிராமம். இந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்திட - தீர்த்திட நானே இரவில் அக்கிராமத்தில் தங்கினேன். என்னுடைய முயற்சியாலும், அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் இந்த கிராமத்திற்கு ஒரு 6 மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நான் தங்கியபொழுது மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தில் எப்படி ஏ.சி. இயந்திரத்தை பொருத்தி அவர்கள் வசதி செய்து கொடுத்திருக்க முடியும்? மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களின் பொய் சொல்லும் ஆற்றலுக்கு இது ஒரு இன்னொரு சான்று. இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். (இணைப்பு:6)
உண்மையில் நான் ஆடம்பரத்தை அறவே வெறுக்கும் ஒரு எளிய அரசு ஊழியன். உண்மையைச் சொல்லப் போனால் நானும் எனது குடும்பமும் மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லத்தில்தான் முதன்முறையாக ஏ.சி. பொருத்தப்பட்ட அறைகளில் வாழ்ந்தோம். அதற்கு முன்பு வரை சென்னையிலோ, பிற இடங்களிலோ நானோ, எனது குடும்பமோ ஏ.சி. பொருத்தப்பட்ட வீட்டில் ஒருபோதும் வாழ்ந்ததும் இல்லை, உபயோகப்படுத்தியதும் இல்லை. இதை எனது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் அறிவார்கள். மேலும் நான் எங்கு சென்றாலும் வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று விடுவேன். என்னோடு வரக்கூடிய குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களின் உணவுத் தேவைக்காகவும் பிறவற்றிற்காகவும் நிர்வாகத்தின் மூலமாக ரூபாய் 1,000 வழங்கப்பட்டிருக்கிறது. உண்மை இப்படி இருக்கையில் ரூ.50,000 கிராம நிர்வாக அலுவலர்கள் செலவு செய்திருக்கிறார்கள் என்று மாண்புமிகு சட்டப் பேரவை துணைத் தலைவர்;திரு. வி.பி.துரைசாமி அவர்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வக்காலத்து வாங்கி பொய் பேச வேண்டிய அவசியம் என்ன, அதன் பின்னணி என்ன என்பதை நாம் ஆய்ந்து பார்த்திட வேண்டிய தருணம் இது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >> Last update : 19-12-2011 04:35
|