கடலைப்பொறி முதல் கணிப்பொறி வரை
மீன் மார்கெட் முதல் ஷேர் மார்கெட் வரை
குட்டிச் சுவர் முதல் அட்டாமிக் பவர் வரை
பொக்கை வாய் முதல் செவ்வாய் வரை
பறை மேளம் முதல் ரூபக தாளம் வரை
நான் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து ஜல்லியடிக்கிற ஜாலி பார்ட்டி.
1989ல இருந்து வாத்தியார்! பேசிக், கோபால்ல (Basic, COBOL)ஆரம்பிச்சு, ஆரக்கிள் ஜாவாவைத் தாண்டி, ஸ்போக்கன் இங்கிலீஷ் வரைக்கும் வந்திருக்கேன். 1995ல இருந்து டைரக்டர்! கொக்கோ கோலா டாப் 10ல ஆரம்பிச்சு, விஜய் டிவி 'கிராண்ட் மாஸ்டர் வரைக்கும்' 1000க்கும் மேல நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கேன்.
ஜிகினா விளம்பரப்படங்கள்(பல), அர்த்தமுள்ள குறும்படங்கள்(சில), திருப்திதந்த நெடும்படங்கள்(ரெண்டு) இயக்கியிருக்கிறேன்.
வர்ணனையாளர், நடிகர் என்று அவதாரம் எடுத்து சக்ஸஸ் என்ற படத்தில் ஹீரோவுக்கு(சிவாஜி ராம்குமாரின் மகன் துஷ்யந்தின்) நண்பனாக வந்து போயிருக்கிறேன்.
தற்போது 'மாஸ்டர் மைன்ட்ஸ் இ அகாடமி' என்ற கல்வி நிறுவனம் நடத்திவருகிறேன்.
அடிக்கடி என் ஒலிப்பூவைக் கேளுங்கள். அலுப்பு இல்லாமலிருக்கும் என்பதற்கு நான் கியாரண்டி.
ஏனென்றால் நான் Information + Entertainment இரண்டும் கலந்த கலவை. சுருக்கமாக நான் ஒரு இன்ஃபோடெயினர்.
ஒலிப்பூ பற்றி :
ஸ்போக்கன் இங்கிலீஷ் முதலில் ஒலிக்கும். 'செயல்வழிக் கல்வி' எனப்படும் 'Active learning' முறையில் அமைக்கபட்ட பாடங்கள்.தொடர்ந்து கேட்டால் நிச்சயம் உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியும். பயம் விலகும். கூச்சம் தொலையும்.சரி அறிமுகம் போதும், வாங்க நிகழ்ச்சியைக் கேட்கலாம்.
ஸ்ரீ தற்சமயம் ஸ்டான்போர்ட் வானொலியில் (KZSU 90.1 FM) வாரம் தோறும் இந்திய நிகழ்ச்சிகளை சிறப்புடன் 'itsdiff radio' (http://www.itsdiff.com) என்ற பெயரில் நடத்தி வருகிறார். பே ஏரியாவில் (Bay Area) வசிக்கும் நண்பர்கள் மற்றும், ஆவல் நிறைந்த திறமைசாலிகளின் உதவியுடன் சேவை மனப்பான்மையோடு கர்நாடக சங்கீதம், சிறப்பு நேர்காணல் மற்றும் நேயர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். க்ரியா கிரியேஷன்ஸ், பாரதி நாடக மன்றம் மற்றும் பே ஏரியா தமிழ் மன்றம் நடத்தும் சிறப்பு நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். கலாகேந்திரா திரு.கோவிந்தராஜன் அவர்களிடம் "நகைச்சுவையாளர்" நினைவுப்பட்டத்தைப் பெற்றவர். சிலிகான் வேலியில் "ப்ரோக்ராம் மானேஜராக" பணியாற்றி வருகிறார். தற்போது அதிகாலை.காமிற்காக அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தை வாரந்தோறும் ஒலிவடிவில் வழங்குகிறார்.
அறிமுகம் : சிவகாமியின் சபதம் : வழங்குபவர் சாந்தி
தாய்லாந்தில் வசிக்கும் திருமதி சாந்தி. தமிழ் ஆர்வலர்.முதுநிலை கணினி பொறிஞராக இருந்தாலும் தமிழுக்காக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற உணர்வுகளுக்குச் சொந்தக்காரர். அன்புக் கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்குத் தாய்! இவர் அதிகாலையின் வேண்டுகோளுக்கிணங்க, தன் வசீகரக் குரல் மூலம் சிவகாமியின் சபதம் நாவலை ஒலிப்பதிவுசெய்து நேயர்களுக்கு வழங்குகிறார்.
இவர், தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி காந்திஅரங்கசாமி ராஜாவின் பெயர்த்தியாவார். தந்தை ரகுபதி ராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா.
எம்.ஏ. ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும் சம்ஸ்க்ருதத்தில் பட்டயப் படிப்பும் படித்துள்ளார்.
மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, 'நீதி சதகம்' என்ற நூலாக வெளிவந்தது (2000).
'மௌனமாய் உன் முன்னே' என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார் (2003).
'பர்த்ருஹரி சுபாஷிதம்' சமஸ்கி்ருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூல் செப்டம்பர் 2005 -ல் வெளிவந்தது.
'நான்காவது தூண்' 'பதினெட்டு பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்'-களின் தொகுப்பு (2006).
'தைவான் நாடோடிக் கதைகள்' (2007).
நிலாச்சாரல் மின்னூலாக இவரின் 'பாயுமொளி நீ எனக்கு' கவிதை நூலை வெளியிட்டுள்ளது.
கல்கி, அமுதசுரபி, மங்கையர் மலர், அமீரக ஆண்டு மலர், படித்துறை, யுகமாயினி, வார்த்தை... மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி, களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் என பல படைப்புகள் வெளிவந்துள்ளன.
படைப்புகள் வெளியான இணைய இதழ்கள், இணைய தளங்கள் : அதிகாலை, மரத்தடி, தமிழ் உலகம், உயிரெழுத்து, சந்தவசந்தம், அன்புடன், ஈ.சுவடி, தமிழாயம், எழுத்தும் எண்ணமும் ஆகிய மடலாடற்குழுக்களிலும் சிஃபி தமிழ், திசைகள், நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம், பதிவுகள், கீற்று, தட்ஸ் தமிழ், தமிழ்நெஞ்சம் ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, நீங்கா இன்பம் என்ற வலைப்பூவையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார். இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். இரத்ததானம், கவுன்சிலிங், விழியிழந்தோருக்கு வாசித்தல், சிறுவர்களுக்கு கல்வி என இயங்கி வருகிறார். இராஜபாளையத்தில் 'இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள், சிறுவர் நூலகம்' அமைய முக்கிய காரணியாய் இருந்தவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, தமிழுக்காகவும் தமிழில் தனித்துவம் மிக்க பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறார். சமூகத்தில் எங்கு தவறு நடந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் தைரியமுள்ளவர் மதுமிதா. புகைப்படம் எடுப்பதிலும், காணொளிப் பதிவு செய்வதிலும் மிகவும் ஆர்வமுள்ளவர். எப்போதுமே இவர் கையில், கேமராவும் (Camera & Camcorder), குரல்பதிவு செய்யும் கருவியும் (Voice Recorder) இருக்கும். சிறுவயதிலிருந்து பிரபலமானவர்களின் படைப்புகளை வாசித்து, பதிவு செய்து... அங்ஙனம் பதிவு செய்ததை, வாசிக்க வசதி-வாய்ப்பில்லாதவர்களுக்கு வழங்கவேண்டும் என்பது இவரது ஆசை. அவரது எண்ணப்படியே அதிகாலையின் 'ஒலி நூலகம்' அமைந்துவிட்டபடியால் உடனே நான் செய்கிறேன் என்று முன் வந்து "பார்த்திபன் கனவு" நாவலை வாரம் தவறாமல் வாசித்து அதிகாலை வாசகர்களுக்கு வழங்கிக்கொண்டுள்ளார்.
அதோடு அதிகாலைக்கும் அவருக்குமான உறவு முற்றுப்பெறவில்லை, அதிகாலையின் ஆசிரிய-நண்பர்கள் குழுவில் ஒருவராகவும் இருந்து இலக்கியம், நேர்காணல், கவிதைப்பார்வை, நூல் விமர்சனங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து தமிழுக்கும், சமுதாயத்திற்கும் தன்னாலான சேவைகளைச் செய்து வருகிறார் என்பதை, அதிகாலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.
கல்கி அவர்களின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல்,முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர் தான். அலை ஓசை! அந்த அலை ஓசையை அதிகாலை
நேயர்களுக்கு ஒலி வடிவில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
தலைப்பு 'அலையோசை' என்று இருப்பதற்குப் பதிலா அலை ஓசை என்று இரண்டு வார்த்தைப் பிரயோகம் ஏன்?. கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தியிருப்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
கல்கி அவர்களுக்கே உரித்தான பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள்! புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.
சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.
'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று சைலஜா தன் இனிய குரலில் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குவோம். உங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள். அது எங்களுக்கு இன்னும் உற்சாகமாக இன்னும் பல நாவல்களை ஒலிவடிவில் வழங்க உதவும்!
அதிகாலை கீதம் சங்கீதம் என்ற புதிய பகுதியை இசைப் பிரியர்களுக்காக சங்கீதம் பகுதியில்அறிமுகப்படுத்துவதில் பெரிதும் மகிழ்கிறது. பெங்களூர் என்றால் இசைக்கலைஞர் பெங்களூர் இரமணியம்மாள் நினைவு வரும்! அதே பெங்களூரிலிருந்து திருமதி.நாகி நாராயணன் அவர்களை அறிமுகப்படுத்துகிறது. அறிமுகம் என்றால் இவர் இசை உலகிற்கு புதியவர் அல்ல; தொலைக்காட்சிகளில் பாடி பரிசில் பெற்றவர். பெங்களூர் நகரில் இசை நிகழ்ச்சிகளை தம் தோழியருடன் செய்து பிரபலமானவர்.
இவரது இயற் பெயர் நாகலக்ஷ்மி நாராயணன். தனது ஆறாவது வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றவர். சிறிது காலம் திரு.டி.கே.ஜெயராமன் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர். பிறகு பெங்களூரில் திரு.ஆர்.கே.பத்மநாபா அவர்களிடமும், திருமதி.நீலா ராம்கோபால் அவர்களிடமும் பயின்றவர்.
ஆங்கில இலக்கியத்தில் ஒரு இளநிலைப் பட்டமும் ( B.A.), இசையில் இன்னொரு இளநிலைப்பட்டமும் (B.A.) சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வசிக்குமிடத்தைச் சுற்றியுள்ள பெண்மணிகள் சிலர் சேர்ந்து "அம்ருத வாஹினி" என்ற பெயரில் ஒரு பாட்டுக்குழு உருவாக்கி பெங்களூரில் பல இடங்களில் பாடி இருக்கிறார்கள். சன் தொலைக்காட்சியில் நடந்த மெல்லிசை பாட்டுப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ராஜ் தொலைக்காட்சியில் நடந்த "ராகம் சங்கீதம்" நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றுள்ளார். இசையுடன் என்றும் தொடர்பு வைத்திருக்க ஆவல் மிகக்கொண்டவர். அவருடைய ஆவலுக்கு "அதிகாலை" ஒரு வடிகாலை ஏற்படுத்தித் தருவதில் மகிழ்ச்சியடைகிறது.
இப்போது அதிகாலைக்கு அலைஓசை நாவலை ஒவ்வொருவாரமும் வழங்கும் திருமதி.சைலாஜா அவர்களின் அறிமுகத்தோடு அதிகாலையில் தம் தேனிசைக் குரலில் ஒவ்வொரு இராகங்களாக அறிமுகப்படுத்துகிறார். 72 மேளகர்த்தா ராகங்களையும் அதன் நுட்பங்களையும் திரைப்படங்களில் பிரசித்திபெற்ற பாடல்களாக எப்படி நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறது என்பதை உதாரணங்களுடன் விளக்கி பெங்களூர் நாகி நாராயணன் அதிகாலை இசைப்பிரியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க இருக்கிறார்கள். இனி "நாகி" அவர்களின் இனிய கீதத்தில் மூழ்கித் திளைப்போமா?